உள்ளூர் செய்திகள்

பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறிப்பு

மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த ஒருவர் திடரென கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார். 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.

தஞ்சாவூர்:

காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

இவரது மனைவி கண்ணம்மை (வயது 51).

இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.

இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கி உள்ளனர்.

இவரது மகன் அரவிந்த் (20) தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சுப்பிரமணியன் தனது மனைவி கண்ணம்மை, மகன் அரவிந்த் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தார்.

நேற்று அரவிந்தை அவர் படிக்கும் கல்லூரியில் கொண்டு விடுவதற்காக காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சைக்கு குடும்பத்துடன் வந்தார்.

அப்போது மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அறிந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி 3 பேரும் சாப்பிட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகில் வந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த மர்ம நபர் ஒருவர் திடரென கண்ணம்மையின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார்.

இதில் 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.

இதில் அதிர்ச்சியடைந்த கண்ணம்மை மற்றும் குடும்பத்தினர் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டனர்.

ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இது குறித்து அவர் தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.