கூடலூர்:
முல்லை பெரியாறு அணையின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது 2ம் போக நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தேவை குறைவாகவே உள்ளது. தற்போது உள்ள நிலையில் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் நீர் பாசன துறைக்கு மனு அனுப்பி இருந்தனர்.
இதனால் தற்போது நீர் திறப்பு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் எந்த அறிவிப்புமின்றி நேற்று மதியம் முதல் நீர் திறப்பு 511 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் 126.80 அடியாக உள்ளது. மழை இல்லாத நிலையில் 8 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் குடிநீருக்காக திறக்கப்படும் 100 கனஅடி நீரே போதுமானது.
இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கையின் படி அதிகாரிகள் தண்ணீர் திறப்பை குறைத்தனர். ஆனால் மீண்டும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் மேலும் குறையும் நிலை உள்ளது.
வருகிற ஜூன் மாதம் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 68.62 அடியாக உள்ளது. 172 கனஅடி நீர் வருகிறது. 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.