விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும்.

மாலை மலர்

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தாலுக்கா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆத்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆத்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் இளையபெருமாள் கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான சந்தை வாய்ப்புகளை எளிமைப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் வடவீரபா ண்டியன் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை இயற்கை சாகுபடியிலும் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறவும் உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் புதிய தொழில்நுட்பங்களையும் வேளாண்மை துறை சார்ந்த மானியங்களையும் விவசாயிகள் இடத்திலே கொண்டு சேர்ப்பதற்கு சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றுவதற்கு அலுவலர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பின்னர் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை வழங்குவதற்கு வேளாண்மை துறை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதலில் ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகமணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினர்.