உள்ளூர் செய்திகள்

ஆசிரியரை மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு

புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் அ.அப்பாஸ் (வயது 51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக இரவில் மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார் . இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர்.

பின்னர் அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனே நான்கு பேரும் சேர்ந்து அப்பாஸின் சட்டைப்பாக்கட்டில் இருந்து ரூ.6500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து அப்பாஸ் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.