தந்தையின் உடலைப்பார்த்து கதறி அழுத மகன்-மகள். 
உள்ளூர் செய்திகள்

தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மகன், மகள்

தந்தை இறந்த துக்கத்திலும் மகன், மகள் ஆகியோர் அரசு பொதுத்தேர்வு எழுதிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சவேரியார்பட்டியைச் சேர்ந்தவர் ரட்சகர் (வயது 46). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி ரோபியா என்ற பிளஸ்-2 படிக்கும் மகளும், ராபின் என்ற பிளஸ்-1 படிக்கும் மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ரட்சகன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று ராபினுக்கு பிளஸ்-1 தேர்வு இருந்தது. தந்தை இறந்த நிலையிலும் மனதை கல்லாக்கிக் கொண்டு அவர் வேடசந்தூர் அரசு பள்ளிக்கு சென்று தனது தேர்வை எழுதி முடித்தார். அதன் பிறகு வீட்டுக்கு வந்து தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்தார்.

இன்று அவரது மகள் ரோபியாவுக்கும் தேர்வு இருந்தது. தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்த அவர் இன்று பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார். தந்தை இறந்த சோகத்திலும் அரசு பொதுத் தேர்வை எழுதிய அவரது மகன் மற்றும் மகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.