உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் நூதன முறையில் ரூ.7 லட்சம் அபேஸ் செய்த பெண்கள்

பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.பணத்தை அபேஸ் செய்த பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பவானி:

சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் குமார் (60). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் குமார் தனது மனைவியுடன் திருப்பூரில் 2-வது மகன் வீடு கட்டி வரும் நிலையில் மகனுக்கு பணம் கொடுக்க ரூ.7 லட்சத்துடன் மேட்டூரில் இருந்து பவானி லட்சுமி நகர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் செல்ல 2 பேரும் பஸ் ஏறி உள்ளனர்.

அப்போது அதே பஸ்சில் 2 பெண்கள் இவரின் சீட்டுக்கு அருகில் ஏறி உள்ளனர். அதில் ஒரு பெண் மயக்கம் வருவதாக கூறி மயக்கம் போட்டு உள்ளார்.

மற்றொரு பெண் அவரை காப்பாற்றுவது போல காப்பாற்றி உள்ளார். பின்னர் அந்த 2 பெண்களும் மருத்துவமனை செல்வதாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர்.

இந்த நிலையில் குமாரின் மனைவி சித்தோடு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தான் வைத்து இருந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் சித்தோடு போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

நூதன முறையில் மயக்கம் வருவதாக நாடகமாடி கணவன், மனைவி கொண்டு வந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை அபேஸ் செய்த அந்த மர்ம பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதனையடுத்து பவானி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் அந்த மர்ம பெண்கள் 2 பேரையும் ஆய்வு மேற்கொண்டதில் 2 பேரும் பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் சென்றது தெரியவந்துள்ளது.

ஓடும் பஸ்சில் கணவன், மனைவியிடம் நூதன முறையில் ரூ.7 லட்சம் அபேஸ் செய்து தப்பி ஓடிய 2 பெண்களை போலீசார் தேடி வரும் சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.