உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டு அருகே உள்ள ரெயில் தண்டபாளத்தை நோக்கி ஓடினார். வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). அவரது மனைவி ஜோதி லட்சுமி.16 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தான் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி கூறி வருவாராம்.

இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டு அருகே உள்ள ரெயில் தண்டபாளத்தை நோக்கி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமி மகனுடன் ஓடிச் சென்று கணவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். திடீரென கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, மகன்களை வீட்டில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டி கொண்டாராம்.

அவர் தூங்குவதாக நினைத்து அனைவரும் வெளியிலேயே அமர்ந்தி ருந்துள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர் ஜோதி லட்சுமியும் அவரது மகன்களும் கதவைத் தட்டியுள்ளனர்.

ஆனால், கிருஷ்ணமூர்த்தி கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து மனைவி ஜோதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.