உள்ளூர் செய்திகள்

காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உள்ளது.இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,012 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.