உள்ளூர் செய்திகள்

பழனி கோவில் பிரசாதங்கள் தபால் மூலம் பெறும் திட்டம் தொடக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் பழனி கோவில் பிரசாத சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.ஒருவர் எவ்வளவு பிரசாதங்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஈரோடு:

ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தைப்பூசத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசாத சிறப்பு விற்பனை கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களான பொதுமக்கள் அஞ்சலகங்களுக்கு சென்று பணம் செலுத்தினால் பழனியில் இருந்து பிரசாதங்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும். ஒருவர் எவ்வளவு பிரசாதங்கள் வேண்டு மானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு பிரசாத பையில் பழனி பஞ்சாமிர்தம் 500 கிராம், பழனி தண்டாயுதபாணி படம் ஒன்று, விபூதி 10 கிராம் இருக்கும். இந்த சேவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.