உள்ளூர் செய்திகள்

வட மாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெருந்துறை:

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், தென்காபாதார் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார் மிஸ்ரா (42).

கடந்த 3 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேட்டுப்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலரும் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் குமார் மிஸ்ராவுடன் தங்கி இருந்த நபர் வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.

ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது . இது குறித்து அந்த நபர் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மனோஜ் குமார் மிஸ்ரா தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.

அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மனோஜ் குமார் மிஸ்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.