உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜேஷ் (18). கல்லூரி மாணவர். மொடக்குறிச்சி அடுத்த பட்டறை வேலம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பூபதி (17). இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜேஷ், பூபதி மற்றும் பூபதியின் தம்பி கலைச்செல்வன் (15) ஆகிய 3 பேரும் பட்டறை வேலம்பாளையத்தில் இருந்து மூலனூர்-ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வளைவில் திரும்பி உள்ளனர்.

அப்போது மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பூபதிக்கு லேசான காயமும், கலைச்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.