உள்ளூர் செய்திகள்

ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கிகள்

இன்று 3-வது நாளாக ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு உள்ளன.கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு கள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

அதேபோல இந்த ஒற்றையானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் ஒற்றையானை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் யானைகள் அங்குள்ள ஓடைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு குளிக்க வைத்தனர்.

பின்னர் மாலை 4 மணியளவில் 2 கும்கி யானைகளையும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ள அரேபாளையம், ஒங்கல்வாடி கிராமம் மற்றும் வனப்பகுதி சாலையில் அழைத்து சென்றனர்.

கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று 3-வது நாளாக ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு உள்ளன.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள கிராமப்பகுதியில் இந்த 2 கும்கி யானைகளையும் வனத்துறையினர் அழைத்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.