உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.45 அடியாக சரிந்து உள்ளது.அணைக்கு வினாடிக்கு 1,014 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.45 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,014 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 1,500 கனஅடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்கும், பவானி ஆற்றுக்கும் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.53 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.85 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.67அடியும் உள்ளது.