ஈரோடு:
மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு பர்கானா மாவட்டம் சந்தேஷ்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அமின் மோலா (34).
இவர் கடந்த ஒன்றரை வருடமாக ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவரது இளைய மகள் பாத்திமா (13) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாத்திமாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுல் மோலா அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.