உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

பெருந்துறை அருகே 50 அடி ஆழம் கொண்ட தோட்டத்து கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.பெருந்துறை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை மலர்

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 88). கணவர் இறந்து விட்ட நிலையில் அம்மணியம்மாள் தனது மகன் துரைசாமி என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

துரைசாமி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட 10 அடி தண்ணீர் உள்ள தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று இரவு அம்மணியம்மாள் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

உடனடியாக துரைசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அம்மணியம்மாள் உடலை கயிறு கட்டி பிணமாக மீட்டனர்.

பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அம்மணியம்மாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.