கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 55). இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணம்மாளின் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணம்மாவின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமியை சிகிச்சை க்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னால் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.