உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி

லாரி சிவசிதம்பரம் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அந்தியூர்:

அந்தியூர் மாவிளக்கு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவசிதம்பரம் (28). இவர் அந்தியூர்அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மேலும் திருமண நிகழ்ச்சிகளில் பீடா போடும் பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் சிவசிதம்பரம் சம்பவத்தன்று இரவு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பீடா போடும் வேலையை முடித்து விட்டு அங்கிருந்து இரவு 10.30 மணி அளவில் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே வந்த போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி சிவசிதம்பரம் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வந்து பார்வையிட்டார். மேலும் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிவசிதம்பரத்தின் தந்தை கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.