உள்ளூர் செய்திகள்

ரோட்டை வழி மறித்த யானைகள் கூட்டம்

ஆசனூர் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் உலாவியது.வனப்பகுதி சாலைகளில் அடிக்கடி யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஆசனூர் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலை யில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறியது. யானைகள் கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் உலாவியது. தொடர்ந்து யானைகள் சாலையை வழி மறித்தது.

இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி கொண்டனர். ஆனால் யானைகள் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.

இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல்  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக சாலையை வழி மறைத்த யானைகள் கரும்பு லாரிகள் வராததால் சிறுது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது.

கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையொட்டி வனப்பகுதி சாலைகளில் அடிக்கடி யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரி க்கை விடுத்துள்ளனர்.