திண்டுக்கல்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் 88 ஆயிரத்து 112 ஆண் வாக்காளர்களும், 93 ஆயிரத்து 524 பெண் வாக்காளர்களும், 33 இதரர்கள் என மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 670 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் 183 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 60 வாக்குச் சாவடிகள் பதட்டமானது என கண்டறியப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டுகளில் பதிவான வாக்குகள் அண்ணாமலையார் பெண்கள் பள்ளி, ஆர்.வி.எஸ். கல்லூரி, அம்மன் கல்வியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் எண்ணப்படுகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்றுமுதல் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.
பயிற்சி வகுப்புகளுக்கு அழைக்கப்படும் ஆசிரியர்களில் ஒருசிலருக்கு உடல்நலக் குறைவும் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் பணியில் பங்கேற்க இயலவில்லை எனில், அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு அலுவலருக்கு பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பில் பங்கேற்குமா-று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொலைபேசி மற்றும் இமெயில் வாயிலாக அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி திண்டுக்கல்லில் இன்று நடந்த முதல்கட்ட பயிற்சி வகுப்பில் 660 பேர் கலந்துகொண்டனர்.
மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். அனைவருக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டதுடன் புரஜெக்டர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படும் விதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்களப்பணியாளர்கள் என்ற அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஏற்கனவே2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் ஆகியிருந்தால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.