கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், இம்மிடி நாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான டி.மணி, இம்மிடிநாயக்கனப்பள்ளி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜோசப்ராஜ் வரவேற்றார். விழாவிற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கினார்.
விழாவில் தலைமை ஆசிரியர் பேசுகையில், இப்பள்ளி வனப்பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது-. இங்கு ஏழை மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இந்த பகுதியில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும் போது கால்வாய் நீரை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர்.
இதை அறிந்த பாரத் பள்ளியின் நிறுவனர் சிறிய கால்வாய் மற்றும் பாலம் அமைக்க ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வழங்கி வருகிறார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.