திருவாரூர்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.
இந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர்.
இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த அப்பகுதியினர் குடவாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் பேரில் அந்த போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனவே குடவாசலில் உள்ள அரசு கல்லூரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யாமல், அதே பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கல்லூரியை அமைக்க வேண்டும்.
இக்கல்லூரி நன்னிலம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கோரிக்கை வைத்து பெறப்பட்ட கல்லூரி ஆகும். எனவே அந்த தொகுதியிலேயே இக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் பார்க்கும்பணி நடைபெற்று வருகிறது.
உரிய இடம் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரி கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.