பெரியகுளத்தில் தவழ்ந்து வந்து வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண். 
உள்ளூர் செய்திகள்

பெரியகுளத்தில் தவழ்ந்து வந்து ஜனநாயக கடமையாற்றிய மாற்றுத் திறனாளி

பெரியகுளத்தில் உதவியாளர் இல்லாத நிலையில் தவழ்ந்து வந்து மாற்றுத் திறனாளி வாக்கு செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி அனைத்து வாக்குச் சாவடி மையங் களிலும் மாற்றுத்திறனாளி களுக்காக வீல் சேர் மற்றும் சாய்வு தளம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு டேவிட் ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்வுதளம் அமைக்கப்பட்டு இருந்தது. வீச் சேர் இருந்தும் மாற்றுத் திறனாளியை அழைத்து செல்ல உதவியாளர் இல்லை.

இதனால்  அந்த மையத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி வேல்மணி (வயது 35) என்ற பெண் தவழ்ந்து வந்து தனது அடையாள அட்டையை காண்பித்தார். அதன் பிறகு தவழ்ந்து சென்றபடியே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்தார்.

ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியாததால் மிகுந்த சிரமத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பிறகும் தவழ்ந்து சென்ற ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு சென்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவியாளர் இல்லாமல் தவழ்ந்து வந்து மாற்றுத் திறனாளி தனது ஜனநாயக கடமையை ஆற்றியது மற்ற வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.