கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும் சாமி வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
நேற்று ஊர் பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நள்ளிரவு முதல் காலை வரை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கங்கணம் கட்டிய பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடைசி நாளான இன்று இரவு துர்வாசர் துருவபங்கம் அங்காளம்மன் பிறப்பு என்னும் புராண நாடகம் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கும்பாபிஷேக திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.