உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி- வனத்துறை நடவடிக்கை

திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர்.

மாலை மலர்

களக்காடு:

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய ப்பட்ட சிறப்புமிக்க தாகும்.

பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். மேலும் தமிழ் மாத முதல் சனிக்கிழமை மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. எனவே மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதையடுத்து திருக்குறு ங்குடி மலையில் உள்ள திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர். இதுபோல ஆற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மழை இல்லாததால் ஆற்றில் கரை புரண்ட வெள்ளம் தணிந்தது.

இதையடுத்து திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்க ப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மழை மீண்டும் பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.