முகாமில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது என்று கண்காட்சி நடத்தப்பட்டது.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இன்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இந்த முகாமில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேயர் இளமதி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்பொழுது ஒருவருக்கு கூட டெங்கு காய்ச்சல் கிடையாது.

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் வீட்டில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பினை பெற்றோர்களுக்கு எடுத்து கூறி முறையாக செயல் படுத்துவார்கள். அதனால் தான் மாணவர்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைய மாணவர்கள் பங்கு முக்கியமானது. நாட்டை பாதுகாப்பது மாணவர்களின் கடமை போல், டெங்கு தடுப்பு விழிப்புணர்விலும் மாணவர்களின் கடமை இன்றியமையானது என பேசினார் .

இதில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான் பீட்டர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.