ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகிரி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பாக சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வட்ட கிளைத்தலைவரும், சிவகிரி வருவாய் ஆய்வாளருமான சரவணகுமார், கூடலூர் வருவாய் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர்கள் வீரசேகரன், முருகானந்தம், ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக உதவியாளர்கள் அழகுராஜா, வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாகுல் ஹமீது, அரவிந்த், நயினார், பார்வதி, மகாலட்சுமி, கணேஷ்குமார், நிலஅளவைத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், 1.1.2023 முதல் வழங்க வேண்டிய 3 சதவீதம் அக விலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139, 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.