குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தம் வண்ணாம்புதூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதில் 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மழைக்காலத்தின் போது வீட்டின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இந்த வீடுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் குழந்தையுடன் தூங்காமல் தவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.