ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. 
உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்:பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தது.விவசாயிகள் கடன் பெற்றுத்தான் வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள்.

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் உள்ள கருநீலங்குளம், மஞ்சுவிளை, பத்மநேரி, மேலபத்தை, கீழபத்தை, பெருமாள்குளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து இருக்கிறார்கள்.

பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றுத் தான் இந்த வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வாழை மரங்கள் தற்போது சேதம் அடைந்திருப்பதால், அவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அதனால், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT