கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகாமையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினந்தோறும் கிலோ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் தற்போது குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமலும் இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆகையால் கடலூர் நகராட்சி அதிகாரிகள் அதிகமாக மக்கள் செல்லக்கூடிய பூ மார்க்கெட் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.