பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர். 
உள்ளூர் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்.

திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் சங்கு ஊதி சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். 

மாவட்ட குழு உறுப்பினர் அஜாய் கோஸ் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார். சி.பி.எம். உறுப்பினர்கள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், மத்திய அரசு கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.110க்கும், டீசல் ரூ.100க்கும் விற்பனையாகிறது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த விலையேற்றம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை உள்ளது. 

எனவே மத்திய அரசு இந்த விலை ஏற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லை எனில் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT