பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

பேராவூரணி:

பேராவூரணி தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்ககைள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாசில்தார் சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாசில்தார் சுகுமார் பேசுகையில்:-

வடகிழக்கு பருவமழை க்காக புயல், மழை, வெள்ள த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் மழையளவு, மழை நிலவரம், மழைக்கால உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு போன்ற நிலவரங்களை உடனே மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறையினர் நீர்நிலைகள், குட்டைகள், திறந்தவெளி கிணறு போன்றவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும்.

பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிகள், சமுதாய கூடங்களை தயார்படுத்த வேண்டும்.

அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மணல் மூட்டைகள், மீட்பு பணிக்கான பவர் பம்புகள், ஜெனரேட்டர் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வருவாய்துறை, பொதுப்பணி துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, ஊராட்சி துறை, சுகாதார துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.