மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆடி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நாட்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த கோவிலில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கோவிலில் ரூ.5. 30 கோடி மதிப்பில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இதில் வனப்பத்திரகாளி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதாகல்யா ணசுந்தரம், பரம்பரை அரங்காவலர் வசந்தா சம்பத், தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்