உள்ளூர் செய்திகள்

தாவரவியல் பூங்காவில் உரம் போடும் பணிகள் தொடக்கம்

தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஊட்டியில் கோடை சீசன் நிறைவடைந்து உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக அங்கு உள்ள பூங்கா புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணி நடந்து வருகிறது.

அங்கு தற்போது மழைப் பொழிவு இருந்து வருகிறது. எனவே புல்வெளிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் உருவாக்கும் வகையில் யூரியா உரம் தூவும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அடுத்த ஒரு சில வாரங்களில் பூங்கா புல்வெளி மீண்டும் பச்சை பசேலென மாறிவிடும் என்று தோட்டக்கலைத் துைறயினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்குவது வழக்கம்.

கோடை சீசன் காரணமாக அந்த மைதானம் சேதமடைந்து உள்ளது. எனவே பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.