திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் சக்திமுருகன் (வயது 18). காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று திண்டுக்கல் பஸ்நிலையத்திலிருந்து சின்னாளபட்டிக்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறி படியில் நின்றபடி பயணம் செய்தார்.
சவேரியார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சக்திமுருகன் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.