கோவை:
நாமக்கல் மாவட்டம் எல்லப் பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர் விஜய் (வயது26). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
விஜய் நேற்று வேலை சம்பந்தமாக கோவை கிணத்துக்கடவிற்கு வந்தார். பின்னர் அங்கு பணிகள் அனைத்தையும் முடித்து கொண்டு இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் புறப்பட்டார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிள் ஈச்சனாரி பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கேரளாவிற்கு கோழி லோடு ஏற்றி கொண்டு அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.
வந்த வேகத்தில் லாரி எதிர்பாராத விதமாக விஜய் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.