வடவள்ளி:
கோவை வடவள்ளி அருகே மருதமலையில் பக்தர்களால் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இன்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜையும், அதை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து தங்க கவசத்தில் ராஜ அலங்காரம் செய்யப் பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் விதமாக முன் மண்டபத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார். காலை முதலே பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அதனை தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. மீண்டும் மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை திருவீதி உலா நடக்கிறது.