கோவை:
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை பிரிவு அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் வனவர் தலைமையில் வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு கார் சந்தேகத்திற்கு இடமாக வந்தது. அதனை பார்த்த வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தவில்லை.
இதனால் ஏற்கனவே சாலையின் ஓரம் மறைத்து நிற்க வைக்கப்பட்டிருந்த வனத்துறை வாகனத்தின் மூலம் அவர்களைத் துரத்திச் சென்றனர். கோவில் மேடு பகுதியில் அந்த காருக்கு குறுக்கே சென்று நிறுத்தி அவர்களைப் பிடிக்க முயற்சி செய்தனர்.
அப்போது திடீரென காரின் நடுப்புற இருக்கையில் இருந்த 3 பேர் காரின் இரு புறமும் கதவுகளைத் திறந்து தப்பிச் சென்றனர்.வனப் பணியாளர்களால் அவர்களை துரத்தி பிடிக்க முயற்சி செய்தனர். இரவு நேரம் என்பதால் பிடிக்க வனத் துறையினரால் பிடிக்க முடியவில்லை.
ஆனால் காரில் இருந்த டிரைவர் லக்ஷ்மணன் மற்றும் வாகனத்தின் பின்பக்க இருக்கையில் இருந்த மணி என்பவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மான் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வந்ததாக கூறினார்கள்.
வாகனத்தை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத ஒற்றை குழல் துப்பாக்கிகள் - 2 மற்றும் வெடிக்காத நிலையில் இருந்த தோட்டாக்கள் 3 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.