கோவை:
கோவை மாவட்டத்தில் 328 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு சுகாதார நிலையத்திற்கும் ஒரு கிராம செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கள அலுவலர் என்பதால் தடுப்பூசி செலுத்துதல், கர்ப்பிணிகள் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்காக குடியிருப்புகளுக்கு சென்று விடுவர்.
கிராம சுகாதார செவிலியர்கள் பெரும்பாலான நேரங்களில் கணக்கெடுப்பு பணிகளிலே ஈடுபட்டிருப்பர். இதனால் துணை சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் பூட்டிய நிலையிலே காணப்படும். அவசர நிலையில் துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் துணை சுகாதார நிலையத்திலே முழு நேரமும் தங்கி பணியாற்றும் வகையில் மாநிலம் முழுவதும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் 168 இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 328 துணை சுகாதார நிலையங்கள் உள்ள நிலை யில் முதல்கட்டமாக 168 துணை சுகாதார நிலையங்களுக்கு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனனர். மீதமுள்ள பிற மையங்களிலும் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
சுகாதார இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் துணை சுகாதார நிலையங் களுக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல், மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற் கொள்வர்.
தேவைப்படும் நோயாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைப்பர். இவர்கள் அங்கேயே தங்கி பணியாற்ற உள்ளதால் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை கிடைக்கும்.
இதன் மூலம் சிறிய பிரச்சினைகளுக்கும் நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும். கிராமப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.