உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

ஊழியர் கைதுநிறுவனத்தின் காவலாளி, ஊழியரை பரிசோதனை செய்தார்.

கோவை

கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோகம் செய்ய இருந்த பொருட்களை பார்சல் செய்து கொண்டு இருந்தார்.

பின்னர் அவர் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நிறுவனத்தின் காவலாளி சங்கர் பரத்தை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மறைத்து திருடி செல்வது தெரியவந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனே மேலாளர் கிறிஸ்டோபர் பெர்னாண்டசிடம் தெரிவித்தார். அவர் அங்கு வந்து சங்கர் பரத்தை கண்டித்து விசாரித்தார். அதில் அவர் ஏற்கனவே ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மேலாளர், ஊழியர் சங்கர் பரத்தை பிடித்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் பரத் கைது செய்தனர். பின்னர் அவர் திருடிய செல்போனை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.