உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை இரட்டைக் கொலையில் வாலிபர் சிக்கினார்

கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சினையில் பேரனை கொன்ற பாட்டியையும் வாலிபர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் கனி. இவரது மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70).

இவர்களுடைய மூத்த மகன் முகமது கனியின் மகன் காசிர் அலி (26). கூலி தொழிலாளி. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

கொலை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக காசிர் அலியை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

அதனை அவரது பாட்டி ஜைத்தூன் பீவி பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவார் என நினைத்து அவரையும் அந்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.