சேலம்:
சேலம் சித்தர்கோவில் அடுத்த பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராசமுத்து மகன் ராஜகணபதி (வயது 42). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமிற்கு வந்து மனு கொடுத்தார்.
அதில், அதே பகுதியை சேர்ந்த துணை தாசில்தார் ஒருவரும், தொழில் மையத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ராஜகணபதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் போலீசாரிடம் அறிவுறுத்தினார். இதன் எதிரொலியாக தற்போது இரும்பாலை போலீசார், அரசு ஊழியர்களான காந்தி தேசாய், சிங்காரவேலு ஆகிய 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த முருகன், வேல்முருகன், கந்தசாமி, பச்சியப்பன், கார்த்திகேயன், வெள்ளையதேவன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.