உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே கட்டிட மேஸ்திரியை அடித்துக்கொன்ற தொழிலாளி

கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து கொன்றனர். சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு சூரம்பட்டி வலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார்.

பின்னர் மது குடித்து விட்டு டாஸ்மாக் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(35) கட்டிட தொழிலாளி தனது நண்பர்கள் இருவருடன் மது குடிக்க வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ண குமாரை, கோபால கிருஷ்ணன் குடிபோதையில் இடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ண குமார் கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடித்து கொன்றனர்.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.

இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.