சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.
இந்நிலையில், பழனிவேலை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. மேலும் பழனிவேல் சவுதியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து வெளிநாட்டில் உள்ள தங்களின் தம்பியை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிவேலின் சகோதரி பழனியம்மாள் கண்ணீர் மல்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்து உள்ளார்.