வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த பேளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தெப்பகுளம் மற்றும் குறிச்சி கிராமத்திலுள்ள இக்கோவிலுக்குச் சொந்தமான விளைநிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, கோயில் தெப்பக்குளம் மற்றும் விளைநிலத்தை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நில அளவீடு செய்தனர். தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு இருப்பது தெரியவந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளுடன், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை தனி வட்டாட்சியர் தமிழ் முல்லை, பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் கஸ்தூரி ஆகியோர் உடன் இருந்தனர்.