கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை

பொங்கல் பண்டிகையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகளவில் உற்பத்தி நடைபெறுவதால், கலப்படம் ஏதும் நடைபெறுகிறதா? என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வெல்லம் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

மாலை மலர்

பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான கணபதி கொட்டாய், கூசிக்கொட்டாய், காவாப்பட்டி, மணியகாரன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சுவெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வெல்லத்திற்கு கலர் சேர்ப்பதற்காக அளவுக்கு அதிகமாக ஹைட்ரோஸ் எனப்படும் ரசாயன பொருள், ரவை, மைதா, கேசரி பவுடர் போன்ற கலப்பட பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும் அதனால் உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என்று அதனை தடுக்க வேண்டுமென்று தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வெல்லம் உற்பத்தி செய்யும் கிரஷர்களை ஆய்வு செய்து ரசாயன பொருட்கள் கலப்படம் செய்துள்ளனரா? என ஆய்வு செய்தார். 

மேலும் ரசாயன பவுடர்கள் கலக்காமல் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வெல்லங்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றார்.