அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவாரூர்- காரைக்குடி இடையே தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாரத்தில் 4 நாட்கள் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி மற்றும் ராமேஸ்வரம்- செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்கின்றன.
இந்நிலையில், ரெயில் நிலைய நடைமேடைகள் விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளங்களுடன் மிகவும் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் நடைமேடைகளில் நடக்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடைபாதைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.