உள்ளூர் செய்திகள்

காசிமேடு மார்க்கெட்டில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வந்தது- கூட்டம் அலைமோதியது

ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

ராயபுரம்:

தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து காசிமேட்டில் இருந்து சுமார் 800 விசைப்படகு மீனவர் கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக் கிழமையின் போது குறைந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் பெரியவகை மீன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனைக்கு வரவில்லை.

இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக் கிழமையான இன்று ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.

இதனால் காசிமேட்டில் பெரியவகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து இருந்தது. கடந்த வாரத்தை விட இன்று பெரிய வகை மீன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டது.

இதையொட்டி அதிகாலை முதலே பொது மக்கள், வியாபாரிகள் மீன்வாங்க குவிந்ததால் காசிமேட்டில் கூட்டம் அலைமோதியது.

வஞ்சிரம், பாறை, வவ்வால், நெத்திலி, சங்கரா, இறால், கடமா உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆனால் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது. பாறை ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.1300 வரையும், சங்கரா ரூ.300 முதல் ரூ.500 வரையும், வவ்வால் மீன் ரூ.300 முதல் ரூ.600 வரையும், பாறை-ரூ.350,நெத்திலி-ரூ.150 க்கு விற்பனை ஆனது.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கடந்த வாரத்தை விட கூடுதலாக விசைப்படகுகள் கரை திரும்பியதால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அடுத்த வாரத்தில் கூடுதலாக மீன்கள் வரும் என்பதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.