உள்ளூர் செய்திகள்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.

பேரூர்

மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.

ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாள் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவானது, கடந்த 28-ந் தேதி காலை கனகசபை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து காலை, மாலை மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.

நாளை மறுநாள் (6-ந் தேதி) ஆருத்ரா தரிசன விழா, அதிகாலை 3.00 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.

பின்னர், காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், 4 மணிக்கு மேல் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகை விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடக்கிறது. இறுதியாக, 6 மணிக்கு மேல் நடராஜரும், சிவகாமி அம்பாளும் சமேதரராக எழுந்தருளி, கனகசபை மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.