ஏற்காடு:
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்காடு ஒன்றியம், அரங்கம் மலைகிராமத்தில் இருந்து குறுக்கு வழியாக குப்பனூர் செல்வதற்காக, கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 250 சில்வர்ஓக் மரங்கள் வெட்டி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர்கள் தொடர்பு இருந்ததை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் பணியில் இருந்த கார்ட் குமார் என்பவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த அரங்கம் கிராமத்தை சேர்ந்த புஷ்ப நாதன், மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவ டிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குப்பனூர் சோதனை சாவடியை மூடி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.