உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் பகுதியில் சுற்றி திரிந்த புலிகள்-பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தல்

ஆண்டிமடம் பகுதியில் புலிகள் சுற்றி திரிந்தனர்பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்து, பெரிய ஆத்துகுறிச்சி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே விஸ்வநாதன் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது விநோத சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் இரண்டு புலிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நடுங்கிய அவர் அந்த இடத்தில் இருந்து தனது மாடுகளை வேக வேகமாக ஒட்டிக் கொண்டு வெளியில் வந்து விட்டார்.

புலிகள் இரண்டும் அருகில் உள்ள கரும்பு வயல் வெளியில் சென்றுள்ளதையும் அவர் கண்டுள்ளார். இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் அவர் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த பகுதி ஊர் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் புலி நடமாடுவது குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும் போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினரும், போலீசாரும் கால் தடத்தை வைத்து ஆய்வு மேற்கொண்டு, புலி எந்த பக்கம் போய் இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். புலிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கை நடைபெற்று கொண்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT